மக்கா, மே 2: நேற்று இங்குள்ள மஸ்ஜிதில் ஹராம் வளாகத்தில் ஜூம்மா தொழுகையை நிறைவேற்றச் சென்ற மலேசியப் புனித யாத்திரை பயணி ஒருவர் சரிந்து விழுந்து காலமானார்.
பகாங்கைச் சேர்ந்த 65 வயதுடைய அப் பயணி, மாரடைப்புக் காரணமாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.15 மணியளவில் (மலேசிய நேரம் மாலை 5.15) உயிரிழந்ததாக மலேசிய ஹஜ் குழுவின் தலைவர் முகமட் ஹிஷாம் ஹருண் உறுதிப்படுத்தினார்.
காலஞ்சென்ற அவர், தனது மனைவியுடன் புனித பூமிக்கு வந்திருந்தார். ஜூம்மா தொழுகைக்காக மஸ்ஜிதில் ஹராம் வளாகத்தில் இருந்தபோது, அவர் திடீரென சரிந்து சுயநினைவை இழந்ததாக முகமட் ஹிஷாம் கூறினார்.
"சம்பவ இடத்திலேயே சுவாச உதவி உட்பட முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஜிவார் ஜபல் ஓமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்."
"எனினும், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது," என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
காலஞ்சென்ற வரின் நல்லடக்க நடவடிக்கைகள் அனைத்தும் தபோங் ஹாஜியால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதில் ஹராமில் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் இங்குள்ள அல் ஷராயா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தபோங் ஹாஜியின் நலத்துறைப் பிரிவு, ஆலோசகர்கள் மற்றும் ஹஜ் வழிகாட்டிகள் காலஞ்சென்ற அவரின் மனைவியைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கியதாக முகமட் ஹிஷாம் குறிப்பிட்டார்.
"காலஞ்சென்ற அவருக்கு தபோங் ஹாஜி 'பதல் ஹஜ்' நிறைவேற்றும். மேலும், மற்ற புனிதப் பயணிகளுடன் அவருக்காக தஹ்லில் மஜ்லிஸ் நிகழ்வும் நடத்தப்படும்," என்றார் அவர்.
மஸ்ஜிதில் ஹராம் வளாகத்தில் ஜூம்மா தொழுகையை நிறைவேற்றச் சென்ற மலேசியப் புனித யாத்திரை பயணி ஒருவர் மரணம்
2 மே 2026, 3:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




