துறை மாறுவதற்கு முன், பன்றிப் பண்ணையாளர்கள் இழப்பீடு, சந்தை உத்தரவாதம் குறித்த விவரங்களைக் கோருகின்றனர்

2 மே 2026, 2:20 AM
துறை மாறுவதற்கு முன், பன்றிப் பண்ணையாளர்கள் இழப்பீடு, சந்தை உத்தரவாதம் குறித்த விவரங்களைக் கோருகின்றனர்

ஷா ஆலாம், மே 2- பன்றிப் பண்ணையாளர்களை வேறு துறைகளுக்கு மாற உதவுவதற்கான சிலாங்கூர் அரசாங்கத்தின் நோக்கத்தை கோலா லங்காட் பன்றிப் பண்ணையாளர்கள் சங்கம் வரவேற்பதாகவும், இருப்பினும், தாங்கள் ஈடுபடவிருக்கும் துறையின் இழப்பீடு மற்றும் சந்தை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை    அறிய விரும்புவதாகவும் கூறியுள்ளது.

மாடு அல்லது ஆடு வளர்ப்பு போன்ற விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புக்கு மாற வேண்டியிருந்தால், அதற்கான தேர்வுகள் குறித்து ஆழமாக புரிந்து கொள்ள விரும்புவதாக அதன் தலைவர் சுவா லெங் கீ கூறினார்.

"நாங்கள் துறை மாறத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுக்குச் சந்தை உத்தரவாதம் தேவை. வாங்குபவர்கள் யார், இலக்கு குழுவினர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

பல பண்ணையாளர்கள் நவீன வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தொழில்முனைவோருக்குப் பெரும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, தற்போதுள்ள உபகரணங்களை மற்ற கால்நடைகளுக்குப் பயன்படுத்த முடியும் என அவர் நம்புவதாகவும் கூறினார்.

கோழி வளர்ப்புடன் ஒப்பிடுகையில், பன்றிகள் வளர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் என்பதால், நீண்ட கால மாற்றம் தேவை என்றும் சுவா விளக்கினார்.

பண்ணையாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்காமல் இருக்க, தற்போதுள்ள கையிருப்பை விற்றுத் தீர்க்க அவகாசம் மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏப்ரல் 28-ஆம் தேதி, சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின், மாநிலத்தில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் இருக்கக் கூடாது என்ற உத்தரவை மாநில நிர்வாகம் செயல்படுத்தும் என்று டத்தோ மந்திரி புசார் கூறியிருந்தார்.

சிலாங்கூர் குடிமக்களாகிய பண்ணையாளர்களின் நலனில் மாநில அரசு கவனம் செலுத்தும் என்றும், மாற்று வருமான ஆதாரங்களுக்கு மாற அவர்களுக்கு உதவும் என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.