அரசாங்கம் மாத இடைநிலை சம்பளத்தை ரிம 3,500 ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது

2 மே 2026, 2:16 AM
அரசாங்கம் மாத இடைநிலை சம்பளத்தை ரிம 3,500 ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது

ஷா ஆலம், மே 2: 2030-ஆம் ஆண்டுக்குள் மாத இடைநிலை சம்பளத்தை ரிம 3,500 ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (கேடிஎன்கே) 40 விழுக்காடாக அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கு ஆதரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

இந்த இலக்கை அடைய, பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டிவிஇடி) பட்டதாரிகளுக்கான தொடக்க சம்பளத்தை நிர்ணயிப்பது உட்பட, தேசிய சம்பள ஆலோசனைக் குழுவின் பங்கை மனிதவள அமைச்சு (கெசுமா) வலுப்படுத்தும் என்றார் அவர்.

"இது ஒரு கனவு அல்ல. இது செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம்," என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 'தொழிலாளர் மடாணி, தேசத்தின் அங்கம்' எனும் கருப் பொருளிலான 2026-ஆம் ஆண்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய வளர்ச்சியில், சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) வரும் ஜூன் மாதம் முதல் '24 மணி நேர லிண்டுங் திட்டத்தை' (Skim LINDUNG 24 Jam) செயல்படுத்தும் என்றும், இது 9.6 மில்லியன் சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் என்றும் ரமணன் தெரிவித்தார்.

"இந்தத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் மட்டுமல்லாது, எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவார்கள். வேலை நேரத்திற்கு வெளியே விபத்து ஏற்பட்டாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.

மேலும், இல்லத்தரசிகளுக்கான 'லிண்டுங் காசிஹ் திட்டத்தின்' வயது வரம்பு 55-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும், இது 720,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளிக்கும்.

"இல்லத்தரசிகள் தங்கள் குழந்தைகள், பெற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக் கொள்வதன் மூலம் நாட்டிற்குப் பெரும் பங்களிக்கின்றனர். அவர்களின் சேவைக்குச் சிறந்த பாதுகாப்புடன் நாம் நன்றி தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. இது வெறும் கொள்கை மட்டுமல்ல, மடாணிஅரசாங்கம் தனது மக்களுக்கு அளித்த வாக்குறுதியாகும்," என்றார் அவர்.

உயர் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்தும் முயற்சியில், சிப் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்பில் திறமையாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக கெசுமா செமிகண்டக்டர் அகாடமியை (ASK) அமைச்சு நிறுவும்.

இந்த முயற்சி, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகளை ஆதரிப்பதற்கும் நாட்டின் குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும் திறமையான தொழிலாளர்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், மாறிவரும் வேலை உலகிற்கு ஏற்ப சட்டக் கட்டமைப்பு பொருத்தமானதாகவும், நியாயமானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக 26 சட்டங்களில் அமைச்சு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது.

"நல்ல சட்டங்கள் இருந்தும் மக்கள் அதை அணுக முடியாவிட்டால் பயனில்லை, எனவே கெசுமா, தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கே செல்லும் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை அறிமுகப்படுத்தும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.