அம்பாங், மே 1: உலகளாவிய விநியோக நெருக்கடியால் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் தாக்கத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் மலேசிய மக்கள் உணரத் தொடங்குவார்கள் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.
தளவாடங்கள், உரம் மற்றும் இதர தொழில்துறை உள்ளீடுகள் உட்பட விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் செலவுகளால் இது ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், இந்த தாக்கம் உணவு மற்றும் அன்றாடப் பொருட்களின் விலையில் எதிரொலிக்கும். ஆரம்பத்தில் அதன் உயர்வு கடுமையாக இல்லாவிட்டாலும், விலைவாசி உயர்வை எதிர்பார்க்கலாம்," என்று அவர் இன்று இங்குள்ள தாமான் மூடா சந்தையில் ஆய்வு செய்த பிறகு கூறினார்.
முதலில் தளவாடத் துறை, அதைத் தொடர்ந்து விவசாயம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களை சார்ந்திருக்கும் தொழில்கள் பாதிக்கப்படும் என்று தெங்கு சஃப்ருல் தெரிவித்தார்.உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் விளைவாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது எண்ணெய் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் விநியோக உள்ளீட்டு செலவுகளையும் பாதிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். சந்தையில் அவர் மேற்கொண்ட ஆய்வின் படி, மூலப் பொருட்களின் விலையில் இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கம் இல்லை. இருப்பினும், பிளாஸ்டிக் போன்ற பொட்டலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன.
எவ்வாறாயினும், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் எரிபொருள் மானியம் காரணமாக நாட்டின் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேவேளையில், எரிபொருள் உட்பட எரிசக்தியை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.






