மேற்காசிய அரசியல் பதற்றத்தால் சிலாங்கூர் சுற்றுலாத் துறையில் மாற்றம்: ஆசிய சந்தை மீது மாநில அரசு கவனம்

29 ஏப்ரல் 2026, 4:39 AM
மேற்காசிய அரசியல் பதற்றத்தால் சிலாங்கூர் சுற்றுலாத் துறையில் மாற்றம்: ஆசிய சந்தை மீது மாநில அரசு கவனம்

ஷா ஆலம், ஏப்ரல் 29 - மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் சிலாங்கூருக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை முறையைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக, மாநில அரசாங்கம் தனது கவனத்தை மிகவும் நிலையான ஆசியச் சந்தைகளின் பக்கம் திருப்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையால், சிலாங்கூர் இனி சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஒரு குறிப்பிட்ட வருடாந்திர இலக்கை நிர்ணயிக்காது என்றும், மாறாக உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வான அணுகுமுறையைக் கையாளும் என்றும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

"முன்னர், மத்திய கிழக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக செலவு செய்யும் திறன் கொண்டவர்களாகவும், உயர்தர பொருட்களை வாங்குபவர்களாகவும், சிலாங்கூர் உட்பட நாட்டில் விடுமுறையைக் கழிக்கும்போது ஐந்து நட்சத்திர தங்குமிடங்களைத் தேர்ந்தெடுப்பவர்களாகவும் இருந்தனர்.

"மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி, அப்பகுதியிலிருந்து வரும் பயணிகளின் வருகையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அதிகப்படியான செலவினங்கள் சுற்றுலா மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளுக்குப் பெரும் பொருளாதாரப் பலன்களை அளித்ததால், அவர்கள் ஒரு முக்கிய பிரிவாக இருந்தனர்.

"ஆனால், தற்போதைய சூழலில் மத்திய கிழக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், நாங்கள் எங்கள் உத்திகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது," என்று சிலாங்கூர் எஃப்எம் வானொலியின் 'தே தாரிக் கோப்பி ஓ' நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, 2026 மலேசியா சுற்றுலா ஆண்டை முன்னிட்டு, மேலும் இலக்கு சார்ந்த விளம்பரத் திட்டங்களை வகுப்பதற்காக, டூரிசம் சிலாங்கூர், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் (MOTAC) தனது உத்திப்பூர்வ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று சுய்
லிம் கூறினார்.

இந்த ஆண்டு சிலாங்கூருக்கு அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், சீனா, ஹாங்காங், தைவான் மற்றும் இந்தோனேசியா போன்ற முக்கிய சந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"2025 சிலாங்கூர் சுற்றுலா ஆண்டில் 8.42 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அவர்களில் 68.25 விழுக்காட்டினர் உள்நாட்டுப் பயணிகள், 31.75 விழுக்காட்டினர் வெளிநாட்டுப் பயணிகள்
ஆவர்.

"புள்ளிவிவரங்களின்படி, வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக சீனா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள். இது ஆசியப் பிராந்தியத்தில் இன்னும் தீவிரமாக ஆராய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதைக் தெளிவாகக் காட்டுகிறது," என்று அவர் விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.