2027 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான ஓர் ஆயத்தப் போட்டியாக சுக்மா 2026 திகழ்கிறது

28 ஏப்ரல் 2026, 2:12 AM
2027 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான ஓர் ஆயத்தப் போட்டியாக சுக்மா 2026 திகழ்கிறது

கூச்சிங், ஏப்ரல் 27: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டிகளுக்கு தேசிய விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்தும் ஒரு முக்கிய தளமாக 2026ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டுப் போட்டிகள் அமைகின்றன என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌபிக் ஜோஹாரி கூறினார்.

ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் இப்போட்டிகள் சிக்கனமான முறையில் நடத்தப்பட்டாலும், இடம்பெறும் விளையாட்டுகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது என்றார் அவர்.

"இது குறித்து சிலாங்கூர் சுல்தான்
ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவுடன் புதன்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டத்தின் முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்படும்," என்று சரவாக் மாநில அளவிலான 'கெம்பாரா இன்ஸ்பிராசி பெலியா அகார் உம்பி' (KIBAR) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், சுக்மா 2026 திட்டமிட்டபடி தொடரும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு (KBS) நேற்று அறிவித்தது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்த பின்னர், சுல்தான் அவர்கள் இந்தப் போட்டிக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதற்கிடையில், சரவாக் மாநிலத்தில் 2027 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான விளையாட்டு வசதிகளைத் தயார்படுத்தும் பணிகள் சில சவால்களுக்கு மத்தியிலும் சுமுகமாக நடைபெற்று வருவதாக சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான சிக்கல்களை ஒப்பந்தக்காரர்கள் எழுப்பியுள்ளதாகவும், அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் ஒவ்வொரு கோரிக்கையையும் மதிப்பீடு செய்வோம். இது சரவாக்கில் நடைபெறும் தொடக்க விழா மற்றும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் பாதிக்காது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் செலவினங்கள் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்படும்,” என்றார்.

அனைத்து வசதிகளும் திட்டமிட்டபடி தயாராவதை உறுதிசெய்ய, இரவு நேரப் பணிகள் உட்பட, திட்டப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், திட்ட அமலாக்கத்தில் எந்தத் தாமதமும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.