சைபர்ஜெயா, ஏப்ரல் 24: பொதுச் சேவையில் நடைமுறையில் உள்ள நெகிழ்வான வேலை முறையை, குறிப்பாக வீட்டிலிருந்து வேலை செய்யும் (BDR) திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தனியார் துறையினர் பரிசீலிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
நிதி அமைச்சருமான அவர், இந்த நடவடிக்கை எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், செலவின அழுத்தங்களைத் தணிக்கவும், அத்துடன் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனையும் மன உறுதியையும் பராமரிக்க உதவும் என்று கூறினார்.
"செலவின அழுத்த அபாயங்களை எதிர்கொள்ள, முதலாளிகளும் தங்கள் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் நடைமுறைக்கேற்ற வகையிலும் இருக்க வேண்டும்," என்றார்.
"மாறிவரும் உலகில் பழைய முறைகளிலேயே தனியார் துறை வசதியாக இருக்க முடியாது. மாறாக, உற்பத்தித்திறனை விரைவுபடுத்தவும், புத்தாக்கம் மற்றும் தன்னியக்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும், கூடுதல் மதிப்பு மற்றும் நிலைத்தன்மையை வளர்க்கவும் இதுவே சரியான நேரம்," என்று அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டு வருவாய் வாரியத்தின் 30ஆம் ஆண்டு கொண்டாட்ட விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். பிரதமரின் உரையை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் வாசித்தார்.
நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்கான தெளிவான கொள்கைகள் மற்றும் மடாணி பொருளாதாரக் கட்டமைப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும், எனவே இந்த சீர்திருத்த முயற்சிகளால் திறக்கப்பட்டுள்ள இடத்தையும் வாய்ப்புகளையும் தனியார் துறை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
"இந்த இலட்சியங்கள் அனைத்தும் முழு மனதுடன் செயல்படுத்தப்படாவிட்டால் நனவாகாது," என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்காசிய மோதலைப் பற்றிக் குறிப்பிட்ட அன்வார், அது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படாவிட்டால், விநியோகச் செலவுகள் அதிகரிப்பது போன்ற பொருளாதார விளைவுகளுக்கு நாடு ஆளாக நேரிடும் என்று பிரதமர் கூறினார்.
"இந்த சவாலான நேரத்தில், முழு அரசாங்க இயந்திரமும் நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும், ஒவ்வொரு ரிங்கிட்டும் விவேகத்துடன் செலவிடப்பட வேண்டும், வீண்விரயத்திற்கான வாய்ப்புகள் மூடப்பட வேண்டும் மற்றும் வருவாய் தளத்தை விரிவுபடுத்தி இணக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.








