சிலாங்கூர் KPDN அதிரடி நடவடிக்கை: விதிமுறைகளை மீறிய வணிகர்களுக்கு எதிராக 4 வழக்குகள் பதிவு

24 ஏப்ரல் 2026, 6:10 AM
சிலாங்கூர் KPDN அதிரடி நடவடிக்கை: விதிமுறைகளை மீறிய வணிகர்களுக்கு எதிராக 4 வழக்குகள் பதிவு

ஷா ஆலம், ஏப்ரல் 24 – சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), நேற்று ஷா ஆலம் மற்றும் சுங்கை பூலோவில் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது சட்ட விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

ஷா ஆலம், செக்ஷன் 9, ஜாலான் தெங்கு அம்புவான் ஸபேடா; சுங்கை பூலோ, ஜாலான் கம்போங் குபு காஜா மற்றும் ஷா ஆலம், ஜாலான் கோத்தா கெமுனிங் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருட்கள் விநியோகம், விலைப் பட்டியல் மற்றும் வெளிநாட்டினருக்கு 1 கிலோகிராம் பொட்டல சமையல் எண்ணெயை விற்க விதிக்கப் பட்டுள்ள தடை தொடர்பான சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கேபிடிஎன் தெரிவித்தது.

"இந்த நடவடிக்கையின் போது, விலைக்கட்டுப்பாடு மற்றும் லாபத் தடுப்புச் சட்டம் 2011-இன் கீழ் இரண்டு வழக்குகளும், எடை மற்றும் அளவீடுகள் சட்டம் 1972-இன் கீழ் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இருப்பினும், சோதனையின் போது பெரும்பாலான வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப் பிடித்தது கண்டறியப்பட்டது.

"கேபிடிஎன் நிர்ணயித்த சட்டங்களான விலைப்பட்டியல் மற்றும் பொருட்களின் கையிருப்பு ஆகியவற்றை பெரும்பாலான வர்த்தகர்கள் பின்பற்றியுள்ளனர். பயன்படுத்தப் பட்ட எடை மற்றும் அளவீட்டுக் கருவிகளும் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருந்தன, மேலும் விலைப் பட்டியல்களும் தெளிவாகவும் ஒழுங்காகவும் காட்டப் பட்டிருந்தன," என்று அது கூறியது.

இதற்கிடையில், தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று கேபிடிஎன் வலியுறுத்தியது.

"வர்த்தகர்கள் நல்ல வணிக நெறிமுறைகளைப் பின்பற்றி, நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறும் எந்த வொரு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அது மேலும் தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.