அரசு சாரா அமைப்பின் நிதி விசாரணை: RM18.36 மில்லியன் மதிப்புள்ள அசையா சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது

24 ஏப்ரல் 2026, 6:04 AM
அரசு சாரா அமைப்பின் நிதி விசாரணை: RM18.36 மில்லியன் மதிப்புள்ள அசையா சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது
அரசு சாரா அமைப்பின் நிதி விசாரணை: RM18.36 மில்லியன் மதிப்புள்ள அசையா சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது

கோலாலம்பூர், ஏப்ரல் 24 – அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்றின் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏ சிசி), 14 சொத்துக்களை உள்ளடக்கிய RM18.36 மில்லியன் மதிப்புள்ள அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.

குண்டாங், மாராங் மற்றும் தெமாசியா கிளென்மேரியில் அமைந்துள்ள RM15.53 மில்லியன் மதிப்புள்ள ஏழு குடியிருப்புகள், RM10 மில்லியன் மதிப்புள்ள ஒரு பங்களா, RM1.53 மில்லியன் மதிப்புள்ள மூன்று அலுவலக வளாகங்கள் மற்றும் RM1.3 மில்லியன் மதிப்புள்ள நான்கு நிலங்கள் இந்தப் பறிமுதலில் அடங்கும் என்று எம்ஏசிசி தனது டிக்டாக் பதிவில் தெரிவித்துள்ளது.

"தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு RM18.36 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பின் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைக்கு உதவும் வகையில் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது.

இந்த வழக்கு சகாட் நிதியல்ல, மாறாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் RM 230 மில்லியன் நன்கொடையில் நடந்த முறைகேடு சம்பந்தப் பட்டது என்பதை எம்ஏசிசி நேற்று உறுதிப் படுத்தியது.

தேவையுள்ளவர்களுக்கு விநியோகிப்பதற்காக செய்யப்பட்ட சில வசூல்களிலிருந்து பெறப்பட்ட தரகுகள் உட்பட, பல்வேறு மூலங்களிலிருந்து அந்த அரசு சாரா அமைப்பு நிதி பெற்றுள்ளதை விசாரணை கண்டறிந்துள்ளதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பின் துணைத் தலைவர் உட்பட 50 மற்றும் 60 வயதுடைய இருவர், ஏப்ரல் 25 வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.