மோதல்களைத் தவிர்த்து நில ஆக்கிரமிப்புகளைக் கையாள மாவட்ட நிலக் குழுவை (JKD) சிலாங்கூர் அரசு தீவிரப்படுத்துகிறது

23 ஏப்ரல் 2026, 8:25 AM
மோதல்களைத் தவிர்த்து நில ஆக்கிரமிப்புகளைக் கையாள மாவட்ட நிலக் குழுவை (JKD) சிலாங்கூர் அரசு தீவிரப்படுத்துகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 23: தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது உள்ளிட்ட நில அத்துமீறல் பிரச்சினைகளுக்கு மோதல்கள் இன்றி ஒழுங்கான முறையில் தீர்வு காணும் நோக்கிலேயே மாவட்டப் பாதுகாப்புக் குழுக்கள் (JKD) செயல்படுத்தப் படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.

ராயல் மலேசிய போலீஸ் (PDRM) உட்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

"தனிப்பட்ட உரிமை உள்ள நிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கும் போது, அதை நிலத்தின் உரிமையாளர்தான் நிர்வகிக்க வேண்டும். இருப்பினும்,  சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் இருக்கும் போது, எந்தவிதமான சண்டைகளும் ஏற்படாதவாறு அதைச் சிறந்த முறையில் கையாள வேண்டும்.

"அதனால்தான், இந்த அத்துமீறல் பிரச்சினை எழும்போது, மாவட்ட அதிகாரியின் தலைமையில் செயல்படும் மாவட்டப் பாதுகாப்புக் குழுக்களை நாங்கள் செயல்படுத்துகிறோம். இதன்மூலம், அத்துமீறியதாகக் கருதப்படும் தரப்பினர் முறையான வழியில் வெளியேறவும், நில உரிமையாளர் நிலத்தைச் சுத்தம் செய்யவும் முடிகிறது.

"நில உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கறிஞர் கட்டணத்தைச் சுமப்பதை நாங்கள் விரும்பவில்லை. தற்போது, மாவட்டப் பாதுகாப்புக் குழுக்களைச் செயல் படுத்துவதோடு, அத்துமீறப் பட்ட நிலங்களை மீட்க இஸ்லாமிய வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டு வருகிறோம்," என்றார்.

இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சுங்கை புரோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஸம்ரி முகமட் ஜைனுல்டின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அதே வேளையில், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான நில அத்துமீறல் பிரச்சினை மட்டுமின்றி, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய சிறிய வழிபாட்டுத் தலங்கள் குறித்தும் புத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ மதங்களுக்கான சிறப்பு செயல் குழு (LIMAS) ஆராய்ந்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரியில், தனியார் நிலங்களில் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது உள்ளிட்ட நில அத்துமீறல் பிரச்சினைகளைக் கையாள மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டப் பாதுகாப்புக் குழுக்களைச் செயல்படுத்தியது.

அமிருடின் தலைமையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்ற (MKN) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவின்படி, தங்கள் நிலத்தில் அத்துமீறல் நடந்திருப்பதைக் கண்டறியும் நில உரிமையாளர்கள், விசாரணை நடத்தவும், தவறு நடந்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையில் புகார் செய்ய வேண்டும்.

மேலும், உரிமையாளர்கள் அத்துமீறிய தரப்பினருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வழங்கி, மாவட்ட அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக மாவட்டப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நியாயமான தீர்வை எட்டுவதற்காக மாவட்டப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் செயல்முறையும் வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.