உள்நாட்டு தோட்டா தயாரிப்பு நிறுவனமான கெட்டெக்  மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்துடன் (UPNM) இணைந்து செம்பனை மூலப்பொருளை  பயன்படுத்தி  உந்துசக்தியை (propellant) உருவாக்கும்

23 ஏப்ரல் 2026, 7:47 AM
உள்நாட்டு தோட்டா தயாரிப்பு நிறுவனமான கெட்டெக்  மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்துடன் (UPNM) இணைந்து செம்பனை மூலப்பொருளை  பயன்படுத்தி  உந்துசக்தியை (propellant) உருவாக்கும்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - உலகளாவிய விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியில், நாட்டின் தேவைகள் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்காக, மலேசியாவின் தோட்டா தயாரிப்புத் துறை ஒரு நீடித்த உள்ளூர் பொருட்களைக்கொண்ட  மாற்று வழியைத் ஆராய்ந்து வருகிறது.

உள்நாட்டு தோட்டா தயாரிப்பு நிறுவனமான கெட்டெக் ஆசியா சென்டிரியான் பெர்ஹாட் (Ketech Asia Sdn Bhd), மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்துடன் (UPNM) இணைந்து செம்பனை மூலப்பொருளை (palm oil biomass) அடிப்படையாகக் கொண்டு தோட்டாவுக்கான உந்துசக்தியை (propellant) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆசிய தற்காப்பு சேவைகள் (DSA) மற்றும் தேசிய பாதுகாப்பு (NATSEC) ஆசியா 2026 கண்காட்சிக்கு வெளியே பெர்னாமாவிடம் பேசிய கெட்டெக் ஆசியாவின் திட்ட இயக்குநர் ரஹாயு பஹாவுதின், புவிசார் அரசியல் அதிர்ச்சிகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றங்களிலிருந்து நாட்டைக் காப்பது இந்த நீண்டகால முயற்சியின் நோக்கம் என்றார். குறிப்பாக, வழக்கமான உந்துசக்தி மூலப் பொருளுக்கு உலகளவில் நிலவும் பற்றாக்குறையைச் சமாளிப்பது இதன் முக்கிய இலக்காகும்.

தற்போது, உலகளாவிய உந்துசக்தித் தொழில், பருத்தியை பெரிதும் நம்பியுள்ளது. இது உந்துசக்தி உருவாக்கத்தில் 80 விழுக்காடு வரை பங்களிக்கிறது என்று அவர் கூறினார்.

பருத்தியுடன் ஒப்பிடும்போது செம்பனை உயிர்ப்பொருளின் செறிவு குறைவாக இருக்கலாம், ஆனால் மலேசியாவில் இந்த விவசாயக் கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதால், இது ஒரு சிறந்த மற்றும் நீடித்த மாற்றாக அமைகிறது.

"மலேசியாவில் செம்பனை உயிர்ப்பொருள் உபரியாக உள்ளது. அதன் மட்டைகளையும் மற்ற கழிவுகளையும் தூக்கி எறிவதற்குப் பதிலாக, அவற்றை நாம் மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமைச் சூழலுக்கு ஆதரவளிக்க முடியும்."

"மேலும், இது நம்மைத் தற்சார்பு அடையச் செய்கிறது. வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்காமல், மூலப்பொருளின் விலையைக் குறைத்து, நாமே உந்துசக்தியைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.

கெட்டெக் ஆசியா, UPNM உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வக சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் ரஹாயு தெரிவித்தார்.

ஆய்வக நிலையிலிருந்து உண்மையான உற்பத்தித் திறனுக்கு இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதற்காக, கெட்டெக் ஆசியா தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் (UPNM) எங்கள் தொழிற்சாலையில் நேரடித் துப்பாக்கிச் சூட்டு சோதனைகளை மேற்கொண்டனர். மேலும், இந்த உற்பத்தியை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு, எங்கள் இயந்திர உற்பத்தியாளர்களையும் நாங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்," என்றார் அவர்.

தற்காப்பு மூலப்பொருட்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் உந்து சக்தியின் விலை மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது என்றும் ரஹாயு கூறினார்.

பகாங், கோலாலிப்பிஸ் உள்ள கெட்டெக் ஆசியாவின் உயர் தானியங்கி தோட்டா தயாரிப்பு தொழிற்சாலை, தற்போது உள்நாட்டுச் சந்தைக்காக ஆண்டுக்கு 130 மில்லியன் 9 மில்லிமீட்டர் மற்றும் 5.56 மில்லிமீட்டர் அளவிலான தோட்டாக்களைத் தயாரிக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.