கோலாலம்பூர், ஏப்ரல் 16 - உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் வேளையில், மக்களின் இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், நாட்டின் உணவு விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, பூடி டீசல் உதவித்தொகை மற்றும் நெல் விவசாயிகளுக்கான உழவு ஊக்கத்தொகை (IPKP) ஆகியவற்றை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவானது, சாமானிய மக்களின் சுமையைத் தணிக்கும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மாதந்திர பூடி டீசல் உதவித்தொகையை 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டாக உயர்த்திய மடாணி அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளை மலேசிய இஸ்லாமிய தக்வா அறக்கட்டளையின் (YADIM) தலைவர் டத்தோ டாக்டர் ஹசான் பஹ்ரோம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, 2026-ஆம் ஆண்டுக்கான பயிர்ச் சாகுபடி பருவத்தில், விவசாயிகளுக்கான உழவு ஊக்கத்தொகையை ஒரு ஹெக்டேருக்கு 300 ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்தத் தொகை வெறும் 160 ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே உதவி தேவைப்படும் பிரிவினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் இந்த உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை இந்த முடிவு பிரதிபலிப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
இது மலேசியா மடாணியின் நல்வாழ்வு, கருணை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு வலு சேர்ப்பதுடன், நாட்டின் விவசாயத் துறை நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடித்து நிற்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
தார்மீக ரீதியாகப் பார்க்கும்போது, நாட்டின் வளங்களை நேர்மையுடன் நிர்வகிப்பதும், பொதுமக்களின் நலனுக்காகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதும் இஸ்லாமிய போதனைகளுக்கு இணக்கமான ஒரு செயல் என டாக்டர் ஹசான் பஹ்ரோம் விளக்கினார்.
இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை ஆதரிப்பதும் பாராட்டுவதும் ஒரு சரியான சமுதாயத்தை உருவாக்குவதற்கான கூட்டுப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, வாழ்க்கைச் செலவினச் சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் காட்டும் இந்த அக்கறையைப் பொதுமக்கள் உணர்ந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








