நியூ டில்லி, மார்ச் 25: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து கலந்துரையாடினார் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் 'தற்போதைய சூழல்' குறித்தும், 'ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்திருப்பதை உறுதி செய்வதன் அவசியம்' குறித்தும் டிரம்ப் மற்றும் மோடி விவாதித்ததாக செர்ஜியோ கோர் தனது X தளத்தில் எழுதியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மோடி வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து டிரம்புடன் 'பயனுள்ள கருத்துப் பரிமாற்றம்' நடத்தியதாகக் கூறினார்.
"பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதியை விரைவில் மீட்டெடுப்பதற்கும் இந்தியா ஆதரவளிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதையும், பாதுகாப்பானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வது முழு உலகிற்கும் மிக முக்கியம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகள் குறித்து தொடர்ந்து தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்று இந்தியப் பிரதமர் தனது X பதிவில் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலில், அப்போதைய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உட்பட 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் மீண்டும் மீண்டும் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத் தினமும் சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளால், கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து உலகளாவிய எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
திங்களன்று, தெஹ்ரானுடன் 'மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறி, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
இருப்பினும், கடந்த சில வாரங்களாக அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி குறித்து டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை
25 மார்ச் 2026, 1:22 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஈரானுடன் வரலாற்று ஒப்பந்தம்: டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

video
Perang dengan Iran didakwa sudah tamat, kenyataan Trump cetus kekeliruan
Kathiravan Manoharan
15 ஏப்ரல் 2026

antarabangsa
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் - டோனல்ட் டிரம்ப்
Shalini Rajamogun
8 ஏப்ரல் 2026

national
மேற்கு ஆசிய பதற்றம்: இந்தியப் பிரதமர் மோடியுடன் அன்வார் இப்ராஹிம் அவசர ஆலோசனை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




