ஈப்போ, செப் 3: தனது பெயரில் போலி டிக்டோக் கணக்கு இருப்பதைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று பேராக் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தனது படம் மற்றும் குரலைப் பயன்படுத்தி பணம் வழங்கும் போலி டிக்டோக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என பேராக் மந்திரி புசார் தெரிவித்தார்.
நேற்று மாலை முதல், தான் பணம் தருவதாகக் கூறி பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதாகப் புகார்கள் தனது தரப்புக்கு வந்துள்ளதாக டத்தோஸ்ரீ சாரணி குறிப்பிட்டார். அது உண்மையல்ல என்றும் அவர் கூறினார்.
"குறிப்பிட்ட டிக்டாக் கணக்கு என்னுடையது அல்ல, வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் உண்மையல்ல. அடையாளம் தெரியாத தரப்பினருடன் பொதுமக்கள் எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார்.
"அனைத்து வகையான அரசாங்க உதவிகளும் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு மற்றும் அதிகாரப்பூர்வ மாநில அரசு தளங்கள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மலேசிய தொலைதொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சாரணி கூறினார்.
டிஜிட்டல் மோசடி தொடர்ந்து பரவுவதைத் தடுக்க, போலி கணக்குகளைக் கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அல்லது சமூக ஊடக தளத்தில் புகார் அளிக்க பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.