ஷா ஆலம், செப். 2 - ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது பேராக் சுல்தான் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது குறித்து ஒரு மக்கள் பிரதிநிதி வெளியிட்ட இனவாத அறிக்கையை மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வன்மையாகக் கண்டித்தள்ளார்.
சமூக ஊடகங்கள் வழியாக அந்த சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றதோடு இனவாதமும் கொண்டது. மேலும், நல்லிணக்கம் மற்றும் பொது
ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று வீ. பாப்பாராய்டு கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். இனங்களுக்கு இடையே குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்க்க எந்தவொரு அறிக்கையும் வெளியிடுவதற்கு முன்னர் முதலில் நன்கு ஆராயவேண்டும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு சம்பவத்துடன் இனத்தை இணைப்பது நியாயமற்றது என்பதோடு அது ஆபத்தான செயல் என்பதை உணர வேண்டும். அச்சம்பவம் தனிநபரை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும்போதுமுழு இனமும் பொறுப்பு என்பது போன்ற தவறான தோற்றத்தை அச்செயல் உருவாக்கக்கூடும்.
அனைத்து தரப்பினரும் குறிப்பாக சமூகத் தலைவர்கள், மாண்புமிகுக்கள் சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறேன். அதாவது எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளைச் சரிபார்த்து செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வது அவசியம்
என்றார் அவர்.
குறுகிய அரசியல் நலன்களுக்காக 68 ஆண்டுகால சுதந்திரத்தையும் நாம் பாதுகாத்து போற்றி வரும் மக்களின் ஒற்றுமையுடன் ஒருபோதும் பணயம் வைக்காதீர்கள் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சுல்தான் நஸ்ரின் ஷாவைத் தாக்க முயன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஒரு சீனர் என்று மஞ்ஜோய் சட்டமன்ற உறுப்பினர் ஹபீஸ் சப்ரி வெளியிட்ட அறிக்கை
தொடர்பில் பாப்பாராய்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநில நிலையிலான சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பிரதான
மேடையில் இருந்த சுல்தான் நஸ்ரின் ஷாவை 41 வயதான உள்ளூர் பெண் ஒருவர் தாக்க முயன்றார். கைது செய்யப்பட்ட அவர் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொழில்முறை விசாரணை அல்லது பரிசோதனையின் அடிப்படையில் பெண்ணின் பின்னணியை முடிவு செய்யும் பொறுப்பை அதிகாரிகளிடம் விட்டுவிட வேண்டும் என்றும் பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
ஒரு சமூகத் தலைவர் என்ற முறையில் அந்த மாண்புமிகு அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பேற்க கடமைப்பட்டிருக்கிறார். இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியவற்றைத் தொடும் எந்தவொரு அறிக்கையும் முழுப் பொறுப்போடு வெளியிடப்பட வேண்டும் என்பதோடு அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடாது.
இது போன்ற சம்பவங்கள் மக்கள் மன்னர் மீதான அன்பையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகக் கருதப்பட வேண்டும். அது மரபுகளை மீறுகிறதா இல்லையா என்பதை அரண்மனை அல்லது அதிகாரிகள் தீர்மானிக்கட்டும் என்று அவர் கூறினார்.
பேராக் சுல்தான் மீதான தாக்குதல் முயற்சி குறித்து இனவாத அறிக்கை - பாப்பாராய்டு கண்டனம்
2 செப்டெம்பர் 2025, 7:18 AM