ஷா ஆலம், ஆக. 29- கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவில் மரணதண்டனை பெற்றவர்கள் பட்டியலில் 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்பதோடு பாதிக்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலைத் துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 829 மலேசியர்கள் மற்றும் 485 மலேசியர்கள் அல்லாதவர்கள் உட்பட 1,314 பேர் மரண தண்டனை கைதிகள் பட்டயலில் இருந்தனர் என்று டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
மரண தண்டனை கைதிகளில் 1,192 பேர் ஆண்கள் என்றும் மீதமுள்ளவர்கள் பெண்கள் என்றும் அவர் கூறினார்.
வயது அடிப்படையில் பார்க்கையில் 64 கைதிகள் 30 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்கள் ஆவர்.
மேலும் 406 பேர் 31-40 வயதுடையவர்கள், 496 பேர் 41-50 வயதுடையவர்கள், 265 பேர் 51-60 வயதுடையவர்கள், 83 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அவர் சொன்னார்.
காஜாங் சிறைச்சாலையில் அதிகபட்சமாக 236 மரண தண்டனை கைதிகள் இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து சிம்பாங் ரெங்கம் (139), தாப்பா (124), பொக்கோக் செனா (101), மற்றும் குளுவாங் (99) சிறைச் சாலைகள் உள்ளனர் என்றும் சைபுடின் கூறினார்.
இதர 615 கைதிகள் நாடு முழுவதும் உள்ள 19 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் 863 கைதிகளும் அதனைத் தொடர்ந்து தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் 422 கைதிகளும் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ளனர் என்றார் அவர்.