சுபாங் ஜெயா, ஆக. 28 - கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பேரிடர்களை எதிர்நோக்கி வரும் பண்டார் சன்வே, பி.ஜே.எஸ். 9, பங்சாபுரி லகூன் பெர்டானா வட்டாரத்தில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை மேற்கொள்ள மொத்தம் 35 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த நிதியை அப்பகுதியில் செயல்பட்டு வரும் திட்ட மேம்பாட்டாளரான கிரனாமாஸ் புரொப்பர்ட்டி சென். பெர்ஹாட் பெருநிறுவன சமூகப் கடப்பாட்டின் ஒரு பகுதியாக வழங்கியதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிசெஷல் இங் மெய் ஸீ கூறினார்.
கிள்ளான் நதியின் நீர்மட்டம் முழு அளவில் இருக்கும் போது தண்ணீர் வெளியேற முடியாததே இங்கு தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என அவர் சொன்னார்.
கனமழை பெய்யும்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடம் தண்ணீரில் மூழ்கி வாகனங்கள் சேதமடைகின்றன.
அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களிலும் மழையின் போது வெள்ளம் புகுந்தது விடுகிறது. இதனால் வர்த்தகர்கள் இழப்புகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்த பிறகு அவர் கூறினார்.
இன்று தொடங்கப்படும் இந்த வெள்ளத் தணிப்பு திட்டம் மூன்று மாதங்களில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாக மிஷெல் கூறினார்.
முதல் கட்டப் பணியின் போது 500,000 வெள்ளி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கால்வாய்கள் நிர்மாணிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
லகூன் பெர்டானாவில் 35 லட்சம் வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டம்
28 ஆகஸ்ட் 2025, 7:26 AM