புத்ராஜெயா, ஆக. 18 - மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏ.பி.எம்.எம்.) இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை பல்வேறு குற்றங்களை உள்ளடக்கிய 851 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 8.4 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறல், மனித கடத்தல், சிகரெட், மதுபானம், மானிய விலை பொருட்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்களும் இதில் அடங்கும் என்று ஏ.பி.எம்.எம். கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் (நடவடிக்கை ) லக்ஸ்மணா மூடா முகமது ஜவாவி அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது அடிக்கடி நிகழும் குற்றச் சம்பவங்களாக அண்டை நாடுகளிலிருந்து சிகரெட், ஆட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விளங்குகின்றன என்று அவர் நேற்று இங்கு ஜீவா மெர்டேக்கா மரிட்டிம் மலேசியா திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடத்தல் கும்பலின் புதிய யுக்திகள் குறித்து கருத்து தெரிவித்த முகமது ஜவாவி, கடத்தலை மேற்கொள்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க ட்ரோன்களை அவர்கள் பயன்படுத்துவதாகக் கூறினார்.
நான் வட மலேசியாவில் பணிபுரிந்தபோது சிப்பி, கெத்தும் அல்லது போதைப் பொருட்கள் பெரும்பாலும் கடத்தப்பட்டன. அப்போது கடத்தல் கும்பல்களால் பறக்கவிடப்பட்ட ட்ரோன்களும் இருந்தன என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் எல்லையில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது உள்பட காவல்துறை மற்றும் இராணுவத்துடனான ஒத்துழைப்பின் விளைவாக அண்டை நாடுகளிலிருந்து நுழையும் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது என்று அவர் கூறினார்.
இது தவிர, சில செயலிகளை பயன்படுத்துவது களத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சவாலை ஏற்படுத்தியதாக முகமது ஜவாவி கூறினார்.