கோலாலம்பூர் ஆக 16- மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 8 ஆம் பொதுக் கூட்டம் இன்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தை தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மித்ரா தலைவர் பிரபாகரன் , குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், விலாயா மாநில சிலம்பக் கழக தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மக்கள் ஓசை ஆசிரியர் எம்.எஸ். மலையாண்டி, மலேசிய நண்பன் ஆசிரியர் டத்தோ எம் இராஜன், தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன் உட்பட சங்க உறுப்பினர்கள் திராளாக கலந்து சிறப்பித்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் நோய் வாய்ப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவிட ஹவானா காசே திட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த 35 பேருக்கு தலா 3,000 வெள்ளி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி இதுவரை சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த தருணத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில், துணை அமைச்சர் தியோ நீ செங் ஆகியோருக்கு சங்கத்தின் உதவித் தலைவர் மற்றும் ஹவானா காசே பொறுப்பாளர் காளிதாஸ் இளங்கோ நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் 15 பேருக்கு ஹாவானா காசே திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைக்க துணை அமைச்சர் தியோ நீ செங் உதவி புரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய கூட்டத்தில் 15 பேரின் பெயர் பட்டியலை காளிதாஸ் இளங்கோ நேரடியாக துணை அமைச்சர் தியோ நீ செங்கிடம் ஒப்படைத்தார். ஹவானா காசே திட்டத்தின் கீழ் மலேசியத் தமிழ் பத்திரிகையாளருக்கு நிதியுதவி கிடைக்க உதவி செய்வேன் என்று தியோ தெரிவித்தார்
பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ தேவை- துணை தகவல் அமைச்சரிடம் கோரிக்கை
16 ஆகஸ்ட் 2025, 8:44 AM