புத்ராஜெயா, ஆக. 13 - தனது எஞ்சியுள்ள தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச இணைப்பு ஆணையை அமல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முயற்சியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்
தொடரலாம் என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பிறப்பித்த பின் இணைப்பு ஆணையை வெளியிடுவதற்கும் அமல்படுத்துவதற்கும் ஏதுவாக நஜிப் உயர்நீதிமன்றத்தில் செய்த நீதித்துறை சீராய்வு மனுவை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி வாதங்களைக் கேட்ட பிறகு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, நஜிப் உயர் நீதிமன்றத்தில் தனது மனுவைத் தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றக் குழு நஜிப்பிற்கு ஆதரவாக இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வாக்களித்தது. இதன் வழி தனது விண்ணப்பத்திற்கு ஆதரவாக கூடுதல் பிரமாணப் பத்திரங்களை நஜிப் தாக்கல் செய்ய அனுமதித்தது.
1மலேசியா டெவலெப்மெண்ட் பெர்ஹாட் (1எம்டிபி) துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திலிருந்து 4.2 கோடி வெள்ளியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி
நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மன்னிப்பு வாரியம் அவரது சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாகக் குறைத்து அபராதத்தை 5 கோடி வெள்ளியாக நிர்ணயிக்க ஒப்புக்கொண்டது.
நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் - மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
13 ஆகஸ்ட் 2025, 5:04 AM