கோல திரங்கானு, ஆக. 12 - இங்குள்ள ஒரு அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் 'டச் அண்ட் கோ' பிரதிநிதி எனக்கூறிக் கொண்ட 'தொலைபேசி மோசடி' கும்பலின் வலையில் சிக்கி 187,800 வெள்ளியை இழந்தார்.
இருபத்தாறு வயதான பாதிக்கப்பட்ட மாணவருக்கு கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி சந்தேக நபரிடமிருந்து அழைப்பு வந்ததாக கோல திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.
செயலியைத் தவறாகப் பயன்படுத்தியதோடு பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அந்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரை மிரட்டியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
விசாரணை நோக்கத்திற்காகவும் நற்பெயரைக் காப்பாற்றவும் பணம் செலுத்தும்படி சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
இதனால் பீதியடைந்த பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த ஆகஸ்டு 4 முதல் 9 வரை ஆறு வெவ்வேறு கணக்குகளுக்கு எட்டு முறை பணம் செலுத்தியுள்ளார்.
தனது சொந்த சேமிப்பு மற்றும் பெற்றோரின் கணக்குகளில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த பணத்தைப் பயன்படுத்தி இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி செத்தியு, பந்தாய் பெனாரிக் சாலையோரத்தில் ஒரு பெண் சந்தேக நபரிடம் தனக்கும் தனது தாயாருக்கும் சொந்தமான மூன்று வளையல்கள், ஐந்து மோதிரங்கள் மற்றும் ஒரு பதக்கத்தையும் ஒப்படைத்துள்ளார் என என்று அவர் தெரிவித்தார்.
தாம் ஏமாற்றப்பட்டதை பின்னர் உணர்ந்த அம்மாணவர் நேற்றிரவு 9.43 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாக அஸ்லி கூறினார்.
இதுபோன்ற அழைப்புகளை பொதுமக்கள் எளிதில் நம்ப வேண்டாம் என்றும் சந்தேக நபர் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புகள் மற்றும் கணக்குகளை செமாக் மியூல் செயலி மூலம் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.