கோலா திரங்கானு, ஆகஸ்ட் 5: போலி முதலீட்டுத் திட்டத்தால் ஏமார்ந்த முதியவர் ஒருவர் RM104,844 இழந்தார்.
மே 28 அன்று, 77 வயதான பாதிக்கப்பட்டவர், முகநூலில் அறிமுகமான பெண் ஒருவரின் சகோதரியின் வற்புறுத்தலால் குறிப்பிட்ட முதலீட்டு திட்டத்தில் இணைந்ததாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.
முதல் வாரத்தில், பாதிக்கப்பட்டவர் RM3,000 மூலதனப் பணத்தைச் செலுத்தியதாகவும், பணம் அவரது முதலீட்டு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதற்கான சான்றாகப் போலி ரசீது வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் மொத்த இலாபத்தைக் காட்டும் ஒரு வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டையும் அனுப்பினார். பெரும் இலாபத்தால் உற்சாகமடைந்த பாதிக்கப்பட்டவர், RM69,000 கூடுதல் முதலீட்டை தொடர்ந்து செய்தார்.
"பின்னர், பாதிக்கப்பட்டவர் இலாபத்தைத் திரும்பப் பெற முயன்ற சமயம் இலாபப் பணத்தில் பணமோசடி கூறுகள் இருப்பதாகக் கூறப்பட்டு RM35,844 செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்," என்று அஸ்லி முகமது ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்து, காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அஸ்லி கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா