ஷா ஆலம், ஆக. 2- சிலாங்கூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சுகாதார பரிசோதனை இயக்கம் ஆகஸ்டு மாதம் முழுவதும் 10 இடங்களில் நடைபெறுகிறது.
இதயம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், புற்றுநோய், கண், காது மற்றும் பல் பரிசோதனைகளை உள்ளடக்கிய இந்த சிலாங்கூர் சாரிங் சுகாதார பரிசோதனை இயக்கம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பின்வரும் இடங்களில் நடைபெறுகிறது:
• ஆகஸ்டு 2- டத்தோ அகமது ரஸாலி மண்டபம் (புக்கிட் அந்தாரபங்சா தொகுதி)
• ஆகஸ்டு 3- டாமன்சரா டாமாய் சமூக மண்டபம் (புக்கிட் லஞ்சான் தொகுதி)
• ஆகஸ்டு 6 மற்றும் 7- சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ஸ்) சுல்தான் சலாவுடின் அஜிஸ் ஷா பள்ளிவாசல் விருந்து மண்டபம்
• ஆகஸ்டு 9- கோல லங்காட் நகராண்மைக் கழக விளையாட்டு வளாகம் (மோரிப் தொகுதி)
• ஆகஸ்டு 9- துலிப் எம்.பி.எஸ்.ஏ. மண்டபம் புக்கிட் நாகா ( சுங்கை கண்டிஸ் தொகுதி)
• ஆகஸ்டு 10- டேவான் பெரிங்கின் எம்.பி.எஸ்.ஏ. செக்சன் 24 (பத்து தீகா தொகுதி)
• ஆகஸ்டு 16- ஸ்ரீ பாகி பாயா ஜெராஸ் எம்.பி.எஸ்.ஏ. மண்டபம் (பாயா ஜெராஸ் தொகுதி)
• ஆகஸ்டு 17- சுங்கை பக்காவ் மண்டபம் (ரவாங் தொகுதி)
• ஆகஸ்டு 23- தெராத்தாய் சமூக சேவை மையம் (தெராத்தாய் தொகுதி)
• ஆகஸ்டு 24- அட்ரியா ஷாப்பிங் கேலரி (பண்டார் உத்தாமா தொகுதி)
செலங்கா செயலி வாயிலாக பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு 7,000 பேர் பயனடைந்ததாகவும் அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.