கோலாலம்பூர், ஜூலை 31 - ஒப்புதல் இல்லாமல் தனது நிறுவனத்தில் கணவரை ஆலோசகராக நியமனம் செய்ததன் மூலம் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ஹமிடா முகமது டெரில் முன்னிலையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 46 வயதான ஃபரா சப்ரினா நசாருடின் மறுத்து விசாரணை கோரினார்.
நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் பெறாமல் தனது கணவர் டேனியல் பிரடெரிக் வால்லை தொழில்நுட்ப ஆலோசகராக நியமிப்பதற்காக ஆசியாபாக் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தனது சொந்த மற்றும் கணவரின் நலனுக்காக தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வெ. 786,209.30 தொகையை மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜனவரி 27ஆம் தேதி முதல் 2023 ஜூலை 28ஆம் தேதிக்கு இடையே, பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஜாலான் சென்ட்ரலில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்தக் குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் 218(1)(d) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 218(2) வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீன் வழங்கிய நீதிபதி ஹமிதா முகமது டெரில் , விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.