கோலாலம்பூர், ஜூலை 31- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இன்று அதிகாலை தாம் தொலைபேசி வழி தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா நிர்ணயித்த வரி விகிதத்தை நாளை தாம் அறிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவின் நிலைப்பாட்டை விளக்கிய பின்னர் வரி தொடர்பான அறிவிப்பை தாமதப்படுத்த வாஷிங்டன் ஒப்புக்கொண்டதாகக் கூறிய அன்வார், குறைந்த விகித வரி விதிப்புக்கான சாத்தியத்தை கோடிக்காட்டினார்.
வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தலைமையில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தினோம்.
எங்கள் கலந்துரையாடல் மற்றும் நான் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து வரி தொடர்பான அறிவிப்பை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்க அதிபர் டிரம்ப்
முடிவு செய்தார் என அன்வார் தெரிவித்தார்.
வரி விகிதம் குறித்து நாளை அறிவிக்கப்படும். மேலும், இந்த முடிவு சாதகமாக இருக்க வேண்டும் என்றும் நமது தேசிய பொருளாதாரத்திற்கு சுமையாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அவர் இன்று மக்களவையில் 13வது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்து ஆற்றிய உரையின் தொடக்கத்தில் கூறினார்.