கோலா கிராய், ஜூன் 1- இங்கு நேற்று மாலை நிகழ்ந்த கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட இரு சாலை விபத்துகளில் இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
பிற்பகல் 2.50 மணியளவில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், சுங்கை சாம்-டபோங் சாலையின் 27வது கிலோமீட்டர் அருகே உள்ள லாடாங் டபோங்கில் 49 வயதான தாய்லாந்து நாட்டவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மண்வாரி இயந்திரம் பள்ளத்தில் விழுந்ததில் அவ்வாடவர் உயிரிழந்ததாக கோலா கிராய் மாவட்ட காவல்துறைத் தலைவர் மஸ்லான் மஸ்லான் மாமாட் கூறினார்.
இந்த விபத்தின் தாக்கத்தால் தூக்கியெறியப்பட்ட ஓட்டுநர் மீது அந்த கனரக வாகனம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி மாண்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வாகனத்தை கட்டுப்படுத்தத் தவறிய ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாக மஸ்லான் கூறினார்.
இதற்கிடையில், நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்த இரண்டாவது சம்பவத்தில், லாடாங் போனான்சா லாலோ பகுதியில் புல்டோசர் இயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதனை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் பலியானதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த புல்டோசர் மேடான தளத்தை சரி செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது சறுக்கி சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது என்று அவர் கூறினார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மஸ்லான் சொன்னார்.