ஜப்பான், மார்ச் 4 - கடந்த ஏழு நாள்களாக வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காட்டுத் தீயினால் பல குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்திருப்பதால், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மிக மோசமான காட்டுத் தீச்சம்பவமாக இது கருதப்படுகிறது. பாதுகாப்பு கருதி ஒஃபுனாத்தோ நகரில் வசிக்கும் சுமார் 4,500-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் 1,200 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். காட்டுத் தீயினால் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2,600 ஹெக்டேர் பரப்பளவுக்குக் காட்டுத்தீ பரவி இருக்க கூடும் நம்பப்படுகிறது.
தற்போது, நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








