ஷா ஆலம், அக். 31- இம்மாதம் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், மாநில பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் அதிக முதலீடுகளை ஈர்க்க கூடிய குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை உள்ளடக்கியுள்ளது.
அனைவருக்கும் பயன் கிடைக்கும் வகையிலான பொருளாதார சுபிட்சத்திற்கு இந்த வரவு செலவுத் திட்டம் உத்தரவாதம் அளிக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
2025 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் அந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (யுபென்), சிலாங்கூர் கருவூலம் மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ செத்தியா ஹரிஸ் காசிம் ஆகியோருடன் சிறப்பு சந்திப்பை நான் நடத்தினேன்.
பொருளாதார வளப்பத்தை மாநில மக்கள் அனைவரும் அனுபவிப்பதற்கு ஏதுவாக பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உதவக்கூடிய சில சிறப்பு முன்னெடுப்புகள் அந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் பல புதிய சவால்கள் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்படும் என்று அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.
சிலாங்கூரில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப மையத்தை உருவாக்குவதன் மூலம் இலக்கவியல் துறையை மேம்படுத்த மாநில அரசு நோக்கம் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.








