(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 27- கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் ஏற்பாட்டில் இங்குள்ள புக்கிட் கெமுனிங், 8வது மைல் எபெனிஸெர் முதியோர் இல்லத்தில் இன்று தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்பட்டது.

தொகுதியிலுள்ள இந்திய கவுன்சிலர்கள், இந்திய சமூகத் தலைவர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் அந்த இல்லத்தைச் சேர்ந்த சுமார் 100 முதியோருக்கு நண்பகல் விருந்து வழங்கப்பட்டதோடு அவர்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.
ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியோர்களும் தீபாவளி மகிழ்ச்சியிலிருந்து விடுபடக்கூடாது என்பதற்காக இத்தகைய நிகழ்வுகளுக்கு தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.
இது தவிர இவ்வட்டாரத்திலுள்ள 50 பேருக்கு மைடின் பேரங்காடியில் பொருள்களை வாங்குவதற்காக தலா 50 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளை தாங்கள் வழங்கியதாகவும் அவர் சொன்னார்.
மேலும், இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிககளை வழங்குவதற்கான வழிவகைகளையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முதியோர் இல்லத்தில் தீபாவளி பொது உபசரிப்பை நடத்துவதற்கு தொகுதி சேவை மையம் சார்பில் சுமார் 8,000 வெள்ளியைச் செலவு செய்துள்ளோம். இதுதவிர, இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 450 பேருக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளை வழங்கினோம். கடந்த வெள்ளிக்கிழமை தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பை ஸ்ரீ மூடாவில் வெகு சிறப்பாக நடத்தினோம்.
இன்று காலை ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற நிகழ்வில் 200 பேருக்கு பற்றுச் சீட்டுகளை வழங்கினோம். அதோடு மட்டுமின்றி கவுன்சிலர்களும் இந்திய சமூகத் தலைவர்களும் தங்கள் வட்டாரங்களில் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பெரிதும் துணையாக இருந்து வரும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜன், திருமதி லோகேஸ்வரி சாமிநாதன் மற்றும் தொகுதி இந்திய சமூகத் தலைவர்களான எம்.கோவி மற்றும் எம்.நடராஜன் ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரகாஷ் கூறினார்.








