கோலாலம்பூர், அக். 21- பொது இடத்தில் கத்தி வைத்திருந்த குற்றத்திற்காக பெண்மணி ஒருவருக்கு இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றம் இன்று ஆறாண்டு சிறை தண்டனை விதித்தது.
அரசுத் தரப்பின் விசாரணைக்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதை தொடர்ந்து ஜெய்மி ஜமாலியா அப்துல்லா (வயது 47) என்ற அந்த பெண்மணிக்கு இத்தண்டனையை விதிப்பதாக நீதிபதி இஸ்ராலிசாம் சனுசி கூறினார்.
கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சிறைத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு தலைநகர், லெபோ புடு ஆப் ஜாலான் டாங் வாங்கி ஜாலான் கஸ்தூரியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் எதிராக அனுமதியின்றி 24 சென்டிமீட்டர் கத்தியை வைத்திருந்ததாக ஜெய்மி ஜமாலியாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி விதிக்க வகை செய்யும் 1958ஆம் ஆண்டு அழிக்கும் மற்றும் வெடிக்கும் பொருள் சட்டத்தின் 6(1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார்.








