(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 8- பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய
அவர்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தும்படி பெற்றோர்களை
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கேட்டுக்
கொண்டார்.
ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் சமயத்தின் வளர்ச்சிக்கு
முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில் பிள்ளைகளின்
கல்விக்கும் சமுதாயம் உரிய முன்னுரிமையை வழங்க வேண்டும் என
அவர் சொன்னார்.
நமது சமூகம் அறிவாற்றல் கொண்ட மற்றும் பொருளாதார ரீதியில்
வலுவான இனமாக உருவாக கல்வி ஒன்றே பிரதான ஆயுதமாக
விளங்குகிறது. ஆகவே. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு
முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் கல்வியில் பின்தங்கிய
மாணவர்களை திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன்
கல்வித் திட்டங்களில் சேர்க்கலாம் என அவர் சொன்னார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இங்குள்ள செக்சன் 28. ஸ்ரீ முத்து
மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து
கொண்டு பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
மாநில மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு உருவாக்கியுள்ள பல சமூக
நலத் திட்டங்கள் வாயிலாக பயன்பெறும் படியும் பொது மக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஆலய நிர்வாகத்தினர், கோத்தா கெமுனிங்
தொகுதி இந்திய சமூகத் தலைவர் எம்.கோபி மற்றும் 200க்கும் மேற்பட்ட
பக்தர்கள் கலந்து கொண்டனர்.








