ஷா ஆலம், அக். 8- இம் மாதம் 19ஆம் தேதி கோல சிலாங்கூர் மாவட்ட நிலையில் நடைபெறவிருக்கும் கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வு புஞ்சா ஆலம், டேவான் எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை
மற்றும் அரசு நிறுவனங்களின் கண்காட்சி ஆகிய அங்கங்களுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
வேலை தேடுவோர் தங்களின் சுயவிபரக் குறிப்பு மற்றும் தேவையான
ஆவணங்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தங்களின் வருகையை உறுதி செய்வதற்கு ஏதுவாக https://bit.lyJOBCAREKUALASELANGOR என்ற இணைப்பின் வழி விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யும் படி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தைகளின் வாயிலாக 168 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றதாக பாப்பாராய்டு முன்னதாக கூறியிருந்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தை வரும் நவம்பர் 16ஆம் தேதி பண்டார் பாரு சாலாக் திங்கி சமூக மண்டபத்திலும் டிசம்பர் 14ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் துன் ரசாக்கிலும் நடைபெறும்.








