இஸ்லாமாபாத், அக். 5- பாகிஸ்தானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட மூன்று நாள் அரசாங்க வருகையின் பயனாக 265 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக வாய்ப்புகளை மலேசியாபெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.
மலேசியாவிலிருந்து செம்பனை இறக்குமதியை அதிகரிப்பதற்கும், மரத்தளவாடங்கள், உரம், பெட்ரோகெமிக்கல் மற்றும் ஒலியோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் அந்நாடு உறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.
பிரதமரின் பாகிஸ்தான் நாட்டிற்கான இந்த அரசாங்க வருகை ஹலால் தொழில்துறையில் பத்து கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டுக் கடப்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்றாண்டுகளில் அமலாக்கம் காணும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமரின் மூன்று நாள் பயணத்தின் இறுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர்
சந்திப்பின் தெங்கு ஸப்ருள் இந்த விபரங்களை வெளியிட்டார்.
மலேசியா-பாகிஸ்தான் பரந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இரு நாடுகளும் அடுத்த மாதம் சந்திப்பு நடத்தும் என்றும் அவர் சொன்னார்.
இரு தரப்புக்கும் பயன் தரக்கூடிய துறைகளில் பாகிஸ்தானுடன் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை கொண்டிருக்க மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது. தென்கிழக்காசியாவில் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த இடம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவை பாகிஸ்தான் சந்தையை இதர ஆசியான் நாடுகளுக்கு விரிவுபடுத்தக்கூடிய சிறந்த நுழைவாயிலாக மலேசியா விளங்க முடியும்
என்று அவர் குறிப்பிட்டார்.








