(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 28- தீபாவளியை பண்டிகையைக் கொண்டாடுவதில்
வசதி குறைந்தவரகள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையை குறைக்கும்
நோக்கில் மாநில அரசு தகுதி உள்ள குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி
மதிப்பிலான இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கி
வருகிறது.
அந்த வகையில் பத்து தீகா தொகுதியும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த
பற்றுச் சீட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி விநியோகித்து
வருகிறது. இந்த விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி
வரை திறந்திருக்கும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல்
அல் ரஷிட் கூறினார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ்.
மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு
பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று
அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும்
குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் பத்து தீகா தொகுதி
வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் கணவர் மற்றும்
மனைவியின் அடையாளக் கார்டு, சம்பள விபர அறிக்கை ஆகியவற்றை
உடன் கொண்டு வர வேண்டும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவச
பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56
தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச்
சீட்டுகள் வழங்கப்படும்.








