ஷா ஆலம், செப். 25- ஒவ்வொரு கொள்கை கட்டமைப்பும் அமல்படுத்தப் படுவதையும் அவை ஆக்ககரமான முறையில் சென்றடைவதையும் உறுதி செய்ய மாநில அரசு நிர்வாகம் நடப்புச் சூழலுக்கேற்ப செயலாற்ற வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
நடப்பு நீரோட்டத்தைப் பின்தொடர்வதில் ஏற்படும் தாமதம் மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளை மாநில அரசினால கையாள முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, நமக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மக்களின் நம்பிக்கையாகும். நாம் தவறான முடிவுகளை எடுத்தால், அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் நம் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்க நேரும் என்று அவர் கூறினார்.
மக்களின் நம்பிக்கையை இழக்கும் பட்சத்தில் நமது நிர்வாகம் பலவீனமானதாகி விடும். மக்களும் நாம் உண்மையானவர்கள் அல்ல எனக் கூறத் தொடங்கிவிடுவார்கள். இதனால் ஏற்படும் அச்சம் காரணமாக நாம் தவறான முடிவுகளை எடுத்து விடுவோம் என்றார் அவர்.
இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வை முடித்து வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் வட பிராந்திய மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
அதிகமான முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதால் சிலாங்கூரின் வட பகுதிக்கான திட்டத்தை நாம் வரைந்தாக வேண்டும். சாப்டா திட்டத்தின் மூலம் அங்கு மேம்பாடுகளைக் காண முடிகிறது என்று அவர் சொன்னார்.
நமது அடுத்த இலக்கு சிலாங்கூரின் வட பகுதியாகும். சபாக் பெர்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அதிக மேம்பாடுகளை கொண்டு வர வேண்டும் என நாம் விரும்புகிறோம் என்றார் அவர்.








