கோலாலம்பூர், செப். 21- வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் பொருள் விலையேற்றப் பிரச்சினைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தாம் பிரதமராகப் பதவியேற்ற இந்த ஈராண்டு காலத்தில் இன்னும் தீர்க்கப்படாமலிருக்கும் சில பிரச்சினைகளில் இந்த இவ்விரு விஷயங்களும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
நாம் பொறுப்பேற்றது முதல் அரசியல் நிலைத்தன்மையுடன் உள்ளது. பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. ரிங்கிட்டின் மதிப்பும் வலுவடைகிறது. ஆயினும், இவற்றால் நாம் கர்வம் கொண்டு விடக்கூடாது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் உள்ளன. ஆகவே. மடாணி வரவு செலவுத் திட்டத்தில் அப்பிரச்சினைக்கு தீர்வு காணவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு இங்குள்ள புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் கெஅடிலான் கட்சியின் பேரணியில் உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு சொன்னார்.
“மடாணி பொருளாதாரம், நாட்டின் வளப்பம், மக்களின் சுபிட்சம்“ எனும் கருப்பொருளிலான 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் வரும் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்








