சிரம்பான், செப்.20: இன்று காலை ஜாலான் மம்பாவ், சிரம்பான் 2 என்ற இடத்தில் டிரெய்லர் ஏற்றிச் சென்ற கான்கிரீட் தடுப்பு கார் ஒன்றின் மேல் விழுந்தது. அதன் விளைவாக அக்கார் தீப்பிடித்து எரிந்ததில் 31 வயது பெண் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அங்கு புரோட்டான் சாகா எஃப்எல்எக்ஸ் கார் முற்றாக எரிந்திருந்ததை கண்டதாகவும் மூத்த செயல்பாட்டுத் தலைவர் அஹ்மத் கொமேனி கமருட்ஸமான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு காரான பெர்டுவா அக்ஸ்சியாவிற்கு சிறு சேதம் மட்டும் ஏற்பட்டிருந்தது மற்றும் 30 வயதான பெண் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், 68 வயதான டிரெய்லர் ஓட்டுனருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- பெர்னாமா








