ஷா ஆஷம், ஆக 28- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் (பி.கே.பி.எஸ்.) செகி ஃபிரெஷ் பேரங்காடியுடன் இணைந்து பெர்ணம் ஜெயா, பாகான் நக்கோடா ஓமாரில் புதிய பேரங்காடியை திறந்துள்ளது.
ஏஹ்சான் செகி ஃப்ரெஷ் என்ற பெயரில் கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த பேரங்காடி பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக பி.கே.பி.எஸ். எஹ்சான் மார்க்கெட்டிங் நிறுவன தலைமை செயலாக்க அதிகாரி ரோஸ்னானி அப்துல் மாலிக் கூறினார்.
பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃபிரெஷ் பேரங்காடியில் முதலாவது கூட்டுத் திட்டமான இது ஏஹசான் செகி ஃபிரெஷ் என்ற பெயரில் செயல்படும். ஏஹ்சான் ரஹ்மா விற்பனை திட்டத்தை விரிவு படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
விவசாயத் துறையை வலுப்படுத்துவதில் பி.கே.பி.எஸ். கொண்டுள்ள ஆற்றல், விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையில் செகி ஃப்ரெஷ் கொண்டுள்ள அனுபவம் ஆகியவற்றை இந்த கூட்டுத் திட்டம் ஒன்றிணைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு உதவுவது தான் எங்களின் நோக்கம். இரு தரப்பின் தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்கும் வகையில் ஏஹ்சான் செகி ஃபிரெஷ் புதிய மற்றும் தரமானப் பொருள்களை நியாயமான விலையில் வழங்கும் என்றார் அவர்.








