ஷா ஆலாம், ஆக. 28- மொத்தம் 6,358 ரூமா இடமான் வீடுகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் கட்டங் கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வரும் 2025 ஆம் ஆண்டில் 2,912 வீடுகளுக்கான சாவிகள் ஒப்படைக்கப்படவுள்ள வேளையில் அதற்கு அடுத்த ஆண்டு மேலும் 3,442 வீடுகள் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் ஏடு தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் ஏறக்குறைய 6,358 வீடுகளை ஒப்படைப்போம். இது இடமான் வீடமைப்புத் திட்டத்தை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள பண்டார் சௌஜனா புத்ராவில் பிஎஸ்பி இடமான் வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
37 கோடியே 50 லட்சம் வெள்ளி மொத்த வளர்ச்சி மதிப்பைக் கொண்ட (ஜி.டி.வி.) இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளடக்கிய 1,312 வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே, மலிவு விலையில் வீடுகளை வழங்குவதில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாக கும்புலன் எம்.ஜி.பி. பெர்ஹாட் நிர்வாகத் தலைவர் டான் ஸ்ரீ ஐஆர் டாக்டர் லிம் ஹாக் சான் கூறினார்.








