கோலாலம்பூர், ஏப் 25 - லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நேற்று நேற்று முன்தினம் காலை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா10,000 வெள்ளியை முதற்கட்ட உதவி நிதியாக வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நிதியை வழங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொது மக்கள் நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு நிதியை தற்காப்பு அமைச்சு தொடக்கியுள்ளது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் விமானச் செலவு, மற்றும் இறுதிச் சடங்கு உட்பட அனைத்துச் செலவுகளையும் மலேசிய ஆயுதப் படைகள் ஏற்கும் என்று முகமது காலிட் கூறினார்.
இவ்விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கையை 14 வேலை தினங்களுக்குள்ளும் முழு அறிக்கையை 30 வேலை நாட்களுக்குள்ளும் சமர்ப்பிக்க விபத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச மலேசிய கடற் படையால் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெறவிருந்த அரச மலேசிய கடற்படையின் திறந்த தினத்தை முன்னிட்டு மூன்றாவது ஒத்திகையை நடத்தும் போது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
- பெர்னாமா








