காஸா நகர்- மார்ச் 4 - காஸா தீபகற்பத்தில் மனிதாபிமான உதவிக்காகக்
காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய
தாக்குதலில் பலருக்கு உயிருடற்சேதங்களும் காயங்களும் ஏற்பட்டதாக
அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.
காஸா நகரின் தென்பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக
அமைச்சின் பேச்சாளரான அஷ்ராப் அல்-குட்ரா கூறினார்.
காஸாவின் வடக்கில் பட்டினியால் வாடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு
எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இனப்படுகொலை நடத்தி
வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
காஸா பகுதியில் பஞ்சம் மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்
ஆகாய மார்க்கமாக உதவிப் பொருள்களை அனுப்பும் பணி ஆக்ககரமானப்
பலனைத் தரவில்லை என்று அங்குள்ள ஊடக அலுவலகம் கூறியது.
காஸாவிலுள்ள சுமார் 24 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை காரணமாகக்
கடும் பட்டினியால் வாடி வருகின்றனர் என்று அந்த அலுவலகம்
வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
காஸாவின் வடபகுதியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்கு
உடலில் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக 15 சிறார்கள்
உயிரிழந்துள்ள வேளையில் மேலும் 700,000 பேரின் உயிர் ஊசலாடும்
நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டது.
வான் மார்க்கமாக அனுப்பப்படும் உதவிப் பொருள்கள் இலக்கை
அடையாதது பெரும் சவாலாக உள்ளது. ஆகாயத்திலிருந்து போடப்படும்
உதவிப் பொருள்கள் இஸ்ரேலியப் பகுதிகள் அல்லது இஸ்ரேலிய
இராணுவத்தின கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விழுகின்றன.
வான் மார்க்கமாக போடப்படும் பொருள்கள் பாதுகாப்பான இடத்தில்
விழாத காரணத்தால் இந்த நடவடிக்கை பொருத்தமானதாக
அமையவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.








