ALAM SEKITAR & CUACA

இ.சி.ஆர்.எல். திட்ட விவகாரம்- விதிமுறைகளுக்கு ஏற்ப மாநில அரசு செயல்படும்- மந்திரி புசார்

25 பிப்ரவரி 2024, 12:06 PM
இ.சி.ஆர்.எல். திட்ட விவகாரம்- விதிமுறைகளுக்கு ஏற்ப மாநில அரசு செயல்படும்- மந்திரி புசார்

அம்பாங் ஜெயா, பிப் 25- சுங்கை சின்சின் பகுதியில் இ.சி.ஆர்.எல். கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டத்தை நிர்வகிப்பதில் மாநில அரசு முறையான வழிகாட்டிகளுக்கு ஏற்ப செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

அந்த இரயில் திட்டத்தை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவை பெறுவது சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களைப் பொறுத்ததாகும் என்று அவர் சொன்னார்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தின் சின்சின் பகுதி நிர்மாணிப்பை நிறுத்துவதற்காக கோம்பாக் உத்தாராவிலுள்ள 13 கிராமங்கள் மற்றும் குடியேற்றப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை எழுப்பியவர்கள் சந்தர்ப்பவாதிகள் மற்றும் பிரச்சினையை உருவாக்க முயலும் குழப்பவாதிகள் என அமிருடின் வர்ணித்தார்.

அவர்கள் வெளியாட்கள். நான் குடியிருப்பாளர்களுடன் பேச்சு நடத்தவுள்ளேன். அவர்கள் தடையுத்தரவு பெற விரும்பினால் அது அவர்களின் விருப்பம். அவர்கள் அவ்வாறு செய்யலாம் என அமிருடின் குறிப்பிட்டார்.

எனினும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய இந்த திட்டத்தை கூடிய விரைவில் முடிக்கும் கடப்பாடு மாநில அரசுக்கு உள்ளதால் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண மாநில அரசு முடிந்த வரை முயலும் என்றார் அவர்.

இந்த திட்டத்தில் தாமதம் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இத்திட்டம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த இரயில் திட்டத்தை வடக்குத் தடத்தில் மேற்கொள்வதற்கு மாநில அரசு இணக்கம் தெரிவிக்கவில்லை. மாறாக அது தெற்கு தடத்தை பரிந்துரைத்தது. எனினும், நீண்ட காலத்திற்கு அரசாங்கம் சுமக்க வேண்டிய பெரும் கடன் தொகையை கருத்தில் கொண்டு அது வடக்குத் தடத்திற்கு ஒப்புதல் அளித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.