MEDIA STATEMENT

நோன்புப் பெருநாளின் போது 30 லட்சம் வாகனங்கள் காராக், எல்.பி.டி.1 சாலைகளைப் பயன்படுத்தும்

15 ஏப்ரல் 2023, 3:42 PM
நோன்புப் பெருநாளின் போது 30 லட்சம் வாகனங்கள் காராக், எல்.பி.டி.1 சாலைகளைப் பயன்படுத்தும்

குவாந்தான், ஏப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் காராக் மற்றும் முதலாம் கட்ட கிழக்குக் கரை நெடுஞ்சாலை (எல்.பி.டி.1) ஆகியவற்றை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் என்று அவ்விரு நெடுஞ்சாலைகளையும் நிர்வகித்து வரும் எ.என்.ஐ.எச்.பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்தது.

கிழக்குக் கரை மாநிலங்களை நோக்கிச் செல்லும் தடத்தில் வரும் ஏப்ரல் 19 முதல் 21ஆம் தேதி வரையிலும் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் தடத்தில் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதி வரையிலும் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஸிமா முகமது ராட்ஸி கூறினார்.

பெருநாள் காலத்தில் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

பொருத்தமான பயண நேரத்தைப் பரிந்துரைக்கும் அட்டவணையை நாங்கள் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி கோம்பாக், காராக் மற்றும் பெந்தோங் டோல் சாவடிகளில் விநியோகம் செய்யவிருக்கிறோம். இதுதவிர எங்களின் சமூக ஊடகங்களிலும் இதன் தொடர்பான தகவல்களை வெளியிடவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாளின் போது நெடுஞ்சாலையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் அதிகரித்துள்ளோம். டோல் சாவடிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை 30 விழுக்காடு அதிகரிப்பதும் இந்நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.

நெடுஞ்சாலைகளில் சீரானப் பயணத்தை உறுதி செய்ய முக்கிய இடங்களில் 140 ரேலா உறுப்பினர்கள் நிறுத்தி வைக்கப்படவுள்ளதோடு எல்.பி.டி. ரோந்துக் குழுவினரின் ரோந்து நடவடிக்கையும் 20 விழுக்காடு அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.