ஷா ஆலம், டிச 29- பத்தாங் காலி ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிலாங்கூர் மாநில காவல் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 1,778 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஒன்பது நாட்களாக தொடர்ந்து நீடித்த அந்த மீட்புப் பணி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து போலீஸ்காரர்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
இவர்கள் மீட்பு பணியில் மட்டும் ஈடுபடவில்லை. மாறாக, பலர் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கவனிக்கும் பணியை தொடர்பு அதிகாரிகள் மேற்கொண்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் வான் நடவடிக்கை பிரிவு, பொது நடவடிக்கைப் பிரிவு, மத்திய சேமப்படை ஆகியவையும் பங்கேற்றன என்றார் அவர்.
மேலும், உலு சிலாங்கூர் மாவட்ட தலைமையகம் மற்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் கே9 மோப்ப நாய்ப் பிரிவும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் முகாம் நடத்துநர், ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், மருத்துவமனை தரப்பினர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அர்ஜூனைடி சொன்னார்.







