ECONOMY

அன்வார் பிரதமராக எந்த நிபந்தனையுமின்றி ஜசெக ஆதரவு- அந்தோணி லோக் கூறுகிறார்

4 டிசம்பர் 2022, 5:06 AM
அன்வார் பிரதமராக எந்த நிபந்தனையுமின்றி ஜசெக ஆதரவு- அந்தோணி லோக் கூறுகிறார்

கோலாலம்பூர், டிச 4- அமைச்சரவையில் ஜசெக பங்கேற்றதன் ஒரே நோக்கம் ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற்றால் அது நாட்டின் ஒட்டுமொத்த வெற்றியாக விளங்கும் என்று அவர் சொன்னார்.

நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றதன் ஒரே நோக்கம் இதுதான். அன்வார் தலைமைத்துவத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் அதே வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்காக ஜசெக உளப்பூர்வமாக பாடுபடுகிறது என்பதையும் நிரூபிப்பதாகும் என்றார் அவர்.

அன்வார் பிரதமராக ஆவதற்கு எந்த நிபந்தனையுமின்றி ஜசெக ஆதரவளித்ததானது அன்வாருக்கு வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்ற கட்சி எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளதை புலப்படுத்துகிறது என்று அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சம்பந்தப்பட்ட அமைச்சுகளில் தலைவர்களுக்கு உள்ள பொருத்தம் மற்றும் மகளிர், இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவம் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்கள் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது என்றார்.

தம்மை (அந்தோணி லோக்) போக்குவரத்து அமைச்சராகவும், ஙா கோர் மிங்கை ஊராட்சி மன்றங்களுக்கான அமைச்சராகவும் ஹன்னா இயோவை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் வி. சிவக்குமாரை மனிதவள அமைச்சராகவும் தேர்ந்தெடுத்த பிரதமரின் முடிவை தாம் மதிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.