கோலாலம்பூர், நவ 23- நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்காக நேற்று தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய இடங்களில் போலீசார் சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்கும் முயற்சியாக இந்த 24 மணி நேர சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
வாகனமோட்டிகளின் வசதிக்காகவும் சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பரபரப்பான நேரங்களிலும் பகல் வேளைகளிலும் சாலைத் தடுப்புகள் இடையூறை ஏற்படுத்தா வண்ணம் இருப்பது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
சாலைத் தடுப்புகளில் குறிப்பாக பரபரப்பான நேரத்திற்கு அப்பாற்பட்ட தருணங்களில் போலீஸ்சாரின் உத்தரவை மதித்து நடக்கும்படியும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
தங்களின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கூறிய அவர், நாட்டின் பாதுகாப்பு முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உத்தரவாதத்தை தாங்கள் அளிப்பதாக சொன்னார்.








