ஷா ஆலம், 18 நவ: 15 வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு (ஹோப்) நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ஓட்டும், ஊழலுக்கு எதிரான ஆணை, இந்த நாடு மீது, அதன் எதிர்காலத்துக்காக நீங்கள் இடும் கட்டளையாக இருக்க வேண்டும், அடுத்தடுத்த தலைமுறைகள் மீது கடன் சுமையை மேலும் திணிப்பதை தடுத்து நிறுத்த முன் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
ஹராப்பான் தலைவர், தனிப்பட்ட லாபத்துக்காக மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்களால் இளைஞர்களின் எதிர்காலம் அடகு வைக்கப்படுவதை காண விரும்பவில்லை.
ஊழல்வாதிகள் உங்கள் (இளைஞர்களின்) எதிர்காலத்தை தீர்மானிக்க விடாதீர்கள். நாடு RM1.2 திரில்லியன் கடன் பட்டுள்ளது, யார் செலுத்த வேண்டும்? இளைஞர்களே.. ஏன்? வளர்ச்சிக்கு கடன் வாங்கப் பட்டதா, பாலங்கள் கட்டவா, மக்கள் மேன்மை திட்டங்களுக்கா? இல்லை. உங்கள் செல்வங்களை நாட்டின் செழிப்பை சுய லாபத்திற்கு விழுங்குகிறது ஒரு கூட்டம்.
"இளைஞர்கள் தூய இலட்சியங்களை கொண்டிருக்க வேண்டும். கொடுங்கோன்மை, ஊழல், பாசாங்குத்தனம், ஆகியவற்றை வெறுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த காட்டுமிராண்டித்தனம் மற்றும் அடாவடித்தனத்தை நிறுத்த ஆணையிடுங்கள், அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்," என்று பேராக்கின் ஈப்போவில் பிரகடனப்படுத்தினார்
சில கட்சிகளின் இன மற்றும் மத பிரச்சாரங்களில் இளைஞர்கள் மயங்கி விட வேண்டாம் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
"இளைஞர்களுக்கு நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நீங்கள் முன்னிலைப் படுத்த விரும்பும் மலாய் தலைவர்களின் பின்னணியை நன்கு ஆராய வேண்டும்.
“நான் ஒரு மலாய்க்காரர், நான் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது மலாய் மொழிக்காகவும் தேசியக் கல்விக்காகவும் போராடினேன். அதற்கு ஈடான சாதனையை எவரும் இன்னும் படைக்கவில்லை என்று அவர் கூறினார்.








