ஷா ஆலம், நவ 18- நாளை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி இதரக் கட்சிகளை விட அதிக பெரும்பான்மையில் அதாவது 86 இடங்களுடன் முன்னிலை வகிக்கும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தேசிய முன்னணிக்கு 51 இடங்களும் பெரிக்கத்தான் நேஷனலுக்கு 25 இடங்களும் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக பிரசித்தி பெற்ற கருத்துக் கணிப்பு அமைப்பான இல்ஹாம் சென்டர் தெரிவித்தது.
வாக்களிப்பில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 80 விழுக்காடு என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பை இல்ஹாம் சென்டர் வெளியிட்டுள்ளது.
“ஹராப்பான் முன்னிலை, பாரிசான், பெரிக்கத்தான் மலாய் தொகுதிகளில் பலப்பரீட்சை, முடிவெடுக்கும் சக்தியாக போர்னியோ கட்சிகள்“ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் ஜி.பி.எஸ். எனப்படும் சரவா கட்சி கூட்டணி 18 இடங்களையும் வாரிசான் மற்றும் காபோங்கான் ராக்யாட் சபா (ஜி.ஆர்.எஸ்.) தலா ஆறு இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெராக்கான் தாமான ஆயர் மற்றும் பார்ட்டி பங்சா மலேசிய ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தைப் பிடிக்கும் எனவும் இல்ஹாம் சென்டர் கணித்துள்ளது.
இதனிடையே, 26 தொகுதிகளில் கட்சிகளுக்கிடையே 50-50 என்ற நிலையில் கடுமையானப் போட்டி நிலவும் எனவும் அது கூறியுள்ளது.








