ஷா ஆலம், நவ 4- சுங்கை பூலோ தொகுதியில் தாம் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படாத விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து அத்தொகுதியில் ஹராப்பான் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என தொகுதி நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா கூறினார்.
அத்தொகுதியில் தமக்கு மீண்டும வாய்ப்பு வழங்குவதில்லை என கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த முடிவை தாம் முழுமனதாக ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
நான் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படாத விவகாரம் சர்ச்சையாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஹராப்பான் கூட்டணி வெற்றியடைந்து புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதை உறுதி செய்வதற்கு தீவிர பிரசாரம் செய்வதுதான் தற்போதைய முக்கிய பணியாகும் என அவர் சொன்னார்.
சுங்கை பூலோ தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளராக அக்கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் 1 டத்தோ ஆர். ரமணன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். அத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் பெரிக்கத்தான் சார்பில் முகமது கசாலி முகமது ஹமின் கெராக்கன் தானா ஆயர் சார்பில் முகமது அக்மால் முகமது யூசுப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.








