ஆர்.பார்த்திபன்
கோம்பாக், நவ.3- இன்று வியாழன் இரவு கோம்பாக் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் கோம்பாக் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் நடவடிக்கை அறையைத் திறக்க வந்த அத்தொகுதி நாடாளுமன்ற வேட்பாளரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தொகுதி மக்களும் ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பை வழங்கினர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர், கோம்பாக் தொகுதி இளைஞர்களை, (பக்காத்தான் ஹராப்பான்) நம்பிக்கைக் கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரம் எனப் புகழ்ந்தார்.
கொள்ளையர்கள் – துரோகிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதில் அத்தொகுதி இளைஞர்களின் ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் காணத் தனக்கு ஆனந்தமாக இருப்பதாகத் தனது உரையில் குறிப்பிட்டார்.
அந்த வேளையில் கோம்பாக் தொகுதி என்றும் என் நெஞ்சில் நிறைந்து இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இங்கு இருக்கும் அனைத்து மக்களும் என் உடன் பிறவா சகோதரர்கள், அதனால் ஒரு பொழுதும் கோம்பாக் தொகுதியை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று நம்பிக்கையுடன் முழங்கினார்.
மேலும் தான் ஒரு தனி மனிதனாக, துரோகத்தை எதிர்கொள்ளவில்லை, தனக்குப் பின்னால் கோம்பாக் தொகுதி மக்கள் இருக்கிறார்கள் ஒரு பொழுதும் அவர்களை நான் கை விடமாட்டேன் என்று இன்று ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் பெலாஞ்சாரான் ஜெந்தெரா நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் விழித்துக் கொண்டார்கள், இனியும் அவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். போதும் நீங்கள் செய்தது என் மக்களை ஒரு போதும் யாரும் ஏமாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
இனி வரும் காலம், மக்களுக்குத் தெரியும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதே வேளையில் நம்பிக்கைக் கூட்டணியும் ஒரு பொழுதும் மக்களைக் கை விடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுதியை மீட்டு எடுக்க 40க்கு மேற்பட்ட இளைஞர்களின் போராட்ட உறுதிமொழியுடன், போராடு இறுதிவரை போராடு, வெற்றி பெறும் வரை போராடு என்ற உற்சாக முழக்கத்துடன் நிகழ்வு முற்றுப்பெற்றது







